Tags

திருப்பூர்:'ஜீரோ டு ஜீரோ' வரிவிதிப்பை அமலாக்குவதன் வாயிலாக, இந்தியா - அமெரிக்கா வர்த்தகத்தை மேம்படுத்தலாம் என, திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச அளவில், அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகள், பருத்தி சாகுபடி மற்றும் பஞ்சு மகசூலில் முன்னோடியாக உயர்ந்துள்ளன. சாகுபடி பரப்பளவு, இந்தியாவைக் காட்டிலும் குறைவு என்றாலும், உற்பத்தித்திறன் அந்நாடுகளில் அதிகம்.

 

விலை உயரும்

நடப்பு பருத்தி சீசனில், நமது நாட்டின் பஞ்சு மகசூல், 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுளளது.

 

இந்தியாவை பொறுத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சு விலையில் பெரிய மாற்றமில்லை. கடைசி நேரத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர வாய்ப்புள்ளது.

 

அதனால், நுால் விலையும் உயர்ந்தால், ஒட்டுமொத்த ஜவுளி வர்த்தகத்தில் இடர்பாடுகளை சந்திக்க நேரிடும் என, வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

 

இதற்கிடையில், அமெரிக்காவுடன் வர்த்தக மேம்பாட்டுக்கான பேச்சுவார்த்தையை இந்தியா துவக்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை சமன் செய்வதன் மூலம், இருநாடுகளுக்கு இடையே பரஸ்பரம் வர்த்தகம் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

அமெரிக்காவில் இருந்து, பஞ்சு இறக்குமதி செய்வதற்கான, 11 சதவீத வரிமுழுதும் நீக்கப்பட வேண்டும். அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு வரி நீக்கம் செய்தால், நம்நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும், ஆயத்த ஆடைகளுக்கும், அந்நாட்டில் வரிவிலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

விரைந்து நடவடிக்கை


அதற்காக, இருதரப்பிலும் வரி இல்லாத 'ஜீரோ டு ஜீரோ' என்ற வரிவிதிப்பு முறையை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடும் சிரமங்களை கடந்து வந்துள்ளது.

தற்போது சாதகமான சூழல் நிலவுவதால், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Published on: 14th March 2025

Source: Dinamalar

e-max.it: your social media marketing partner