Tags

திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த சாயமிடுதல், பிரின்டிங்க், எம்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

மேலும் தொழிலாளர்கள் சார்ந்து ஏராளமானோர் மறைமுக வேலை வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். திருப்பூரில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என அந்தந்த நாட்டு மத்திய வங்கிகள் எண்ணுவதால் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.

இதே நிலை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மந்தநிலை பாதிப்புகள் வெளி வரத்தொடங்கி உள்ளன. இதன் உச்சகட்டமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மக்கள் தாங்கள் வாங்கும் ஆயத்த ஆடைகளை ஒன்று அல்லது இரண்டு முறை அணிவது என்ற நிலைமாறி இப்போது மூன்று அல்லது நான்கு முறைக்கு மேல் அணிவது அதிகரித்து உள்ளதாகவும், இது பொருளாதாரம் மீண்டு வரும் வரை தொடரும் என கூறப்படுகிறது. இதே நிலை தான் அமெரிக்கா, பிரிட்டன் சந்தையிலும் எதிரொலிக்கிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூலையில் 0.60 சதவீதமும், ஆகஸ்ட்டில் 0.34 சதவீதம், செப்டம்பரில் 18.06 சதவீதம், அக்டோபரில் 21.16 சதவீதம் அளவுக்கு நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.

மேலும் ரஷ்யா - உக்ரைன் போரின் தாக்கம் காரணமாகவும், உறை பனிக்காலம் தொடங்கியுள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தற்போது மக்கள் வீட்டு உபயோக பொருட்கள், எரிவாயு, மின்சாரம், உணவுப் பொருள் வாங்க முன்னுரிமை அளிப்பதால் கடந்த ஆண்டுகளை காட்டிலும் ஆடை வாங்குவது குறைந்துள்ளது. புதிய ஆர்டர் பெறுவதில் சரிவு, முடித்த ஆர்டர்களுக்கான பணம் பெறுவதில் ஏற்படும் தாமதம், ஒப்பந்தம் செய்த ஆர்டர்களை ஏற்காமல் இருப்பது, முடித்த ஆர்டர்களை தாமதமாக அனுப்ப கட்டாயப்படுத்துவது என நாளுக்குள் நாள் பல்வேறு சோதனைகள் ஆயத்த ஆடைத் துறை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மத்திய அரசு ஏற்றுமதி வர்த்தகம் சார்ந்த தரவை வெளியிட்டுள்ளது. இதில் ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த 2021-22ம் நிதி ஆண்டு செப்டம்பரில் 130 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்த செப்டம்பரில் 106.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் 18.06 சரிவும், கடந்த ஆண்டு அக்டோபரில் ஆடை ஏற்றுமதி 125.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, கடந்த மாதம் அக்டோபரில் மிகவும் சரிந்து 98.9 பில்லியன் அமெரிக்க டாலர் என கடந்த ஆண்டு அக்டோபரை காட்டிலும் இந்த அக்டோபரில் 21.16 சதவீதம் சரிவை கண்டுள்ளது. இதனால் வரும் மாதங்களில் மேலும் இந்த அளவு அதிகரிக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் அதிக வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம். சுப்ரமணியன் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் பாதிக்கப்படுவதால், ரிசர்வ் வங்கி ஏற்றுமதி மறுநிதி திட்டத்தை வங்கிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவிகிதம் உயர்த்தி 5.90 சதவீ தத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக வங்கிகள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கிய கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இதில் கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் உலக பொருளாதாரத்தில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது ஏற்றுமதியிலும் எதிரொலிக்கிறது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு கடந்த 4 மாதமாக வங்கி கடன் வட்டி மானிய விகிதத்தை வங்கிகள் குறைத்துள்ளதால் போட்டி நாடுகளுடன் போட்டியிடுவதில் சிரமம் உள்ளது. 

கொரோனா காலத்தில் இருந்ததை போல் வங்கி கடன் வட்டி மானிய விகிதத்தை ஏற்றுமதியாளர்களுக்கு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கி, ஏற்றுமதி மறுநிதி திட்ட வசதியை அறிமுகப்படுத்த வேண்டும். ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தாலும், ரிசர்வ் வங்கி ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் மூலமாக மறுநிதி திட்டத்தை செயல்படுத்தும்போது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வெளிநாட்டு ஆர்டர்களையும் பெற வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சரிவு தொடர்கிறது. இந்நிலை மாறவும் சர்வதேச சந்தைகளில் போட்டியை சமாளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். 

குறிப்பாக பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆஸ்திரேலிய ஒப்பந்தம் நிறைவேறியுள்ள நிலையில் பிரிட்டனுடனான ஒப்பந்தம் இம்மாதம் கடைசி வாரத்திற்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், சர்வதேச சந்தைகளில், வங்கதேசம், வியட்நாம், சீனா போன்ற நாடுகள் கடும் போட்டியை உருவாக்கியுள்ளன. போட்டியை சமாளிக்க, அந்நாடுகளில் பல சலுகை வழங்கப்படுகிறது. வரியில்லா ஒப்பந்தம் உருவானால் மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பெற முடியும். முன்னதாக வட்டி சமன்செய்யும் திட்டத்தில், பேக்கிங் கிரெடிட் மீதான வட்டியை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.ரெப்போ ரேட் மாறுபாட்டால் பின்னலாடை தொழில் பாதிக்காத வகையில் நிதியளிப்பு திட்டத்தை மத்திய ரிசர்வ் வங்கி செயல்படுத்த வேண்டும். 

இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிக அளவில் உள்ளது. போதிய மனித வளமும், தொழில்நுட்பமும் நம்மிடம் உள்ளது. ஆனால் நம்மை விட சிறிய நாடுகளான வங்கதேசம், வியட்நாம் ஜவுளி ஏற்றுமதியில் கோலோச்சுகின்றன. இந்திய அரசிடம் தெளிவான கொள்கை இல்லாததே இதற்கு காரணம். ஜவுளி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து புதிய கொள்கையை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

Published On : 03-12-2022

Source : Malai Malar

e-max.it: your social media marketing partner